ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று (ஏப்ரல் 8) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே இந்த சீசனை மும்பை அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இந்த 3 ஆட்டங்களிலுமே அந்த அணி இலக்கை துரத்த முடியாமல் தோற்றுள்ளது. இதில் 2 ஆட்டங்களை தனது கோட்டையான சேப்பாக்கத்தில் அந்த அணி விளையாடியிருந்தது.
180 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலே சிஎஸ்கே வெற்றி பெறுவது இயலாத காரியமாக மாறி உள்ளது. இது கடந்த 10 ஆட்டங்களாக தொடர்வது ரசிகர்களை கவலையடைச் செய்துள்ளது. நடப்பு சீசனில் மட்டும் பெங்களூரு அணிக்கு எதிராக197 ரன்கள், ராஜஸ்தான்அணிக்கு எதிராக 183 ரன்கள், டெல்லி அணிக்கு எதிராக 184 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது. இலக்கை துரத்தும் போது சிஎஸ்கேவிடம் இருந்து எந்தவித போராட்ட குணமும் வெளிப்படாததே ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
வெற்றிக்கான பிளேயிங் லெவனை கண்டறிவதே சிஎஸ்கேவுக்கு பெரிய Task-க்காக மாறி உள்ளது. ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், சேம் கரண் ஆகியோரை நீக்கிவிட்டு டேவன் கான்வே, முகேஷ் சவுத்ரி, விஜய் சங்கர் ஆகியோரை பயன்படுத்திய போதிலும் சிஎஸ்கே அணியால் வெற்றியை கொடுக்க முடியவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரும் நிலையாக விளையாடுவதில்லை. இவர்கள் இருவருமே எதிரணியினர் விரிக்கும் வலையில் சரியாக சிக்கி விக்கெட்டை பறிகொடுப்பது வாடிக்கையாக மாறி உள்ளது.
தற்போது சிஎஸ்கே 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இன்னும் 10 ஆட்டங்களே மீதம் உள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டும். இதற்கு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே சாத்தியம். தற்போததைய நிலையில் இது நிகழ வேண்டுமானால் ஏதேம் மாயங்கள் ஏற்பட வேண்டும்.