35 பந்தில் சதம் * உடைந்து நொறுங்கிய சாதனைகள்
ஜெய்பூர்: குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சாதனை சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். சாய் சுதர்சன், கேப்டன் கில் இணைந்து குஜராத் இன்னிங்சை தொடங்கினர். வழக்கம்போலவே சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 93 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.
சுதர்சன் 39 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி தீக்ஷனா பந்துவீச்சில் பராக் வசம் பிடிபட்டார். அடுத்து கில் – பட்லர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தனர். கில் 84 ரன் (50 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி தீக்ஷனா பந்துவீச்சில் பராக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 13, ராகுல் திவாதியா 9 ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. பட்லர் 50 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), ஷாருக் கான் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் தீக்ஷனா 2, ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி இணைந்து துரத்தலை தொடங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி குஜராத் பந்துவீச்சை பதம் பார்க்க… ராயல்ஸ் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. குறிப்பாக, சூர்யவன்ஷியின் ஆட்டத்தில் அனல் பறந்தது.
எதிர்கொண்ட பந்துகளை எல்லாம் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட வைபவ், ஜெய்ஸ்வாலை அசால்டாக ஓவர்டேக் செய்து 17 பந்தில் அரை சதம் அடித்ததுடன் அதே வேகத்தில் அடித்து நொறுக்கி 35 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தான். ஏதோ மாயாஜாலம் போல நம்ப முடியாத வகையில் இருந்த சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் பவுலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அரங்கில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டி சூர்யவன்ஷியின் சாதனை சதத்துக்கு வாழ்த்து தெரிவித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சூர்யவன்ஷி 101 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 11 சிக்சர்) விளாசி பிரசித் கிருஷ்ணா வேகத்தில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த நிதிஷ் ராணா 4 ரன்னில் வெளியேறிய நிலையில், ஜெய்ஸ்வால் – கேப்டன் பராக் இணைந்து வெற்றியை விரைவாக எட்டுவதை உறுதி செய்தனர். ராஜஸ்தான் 15.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஜெய்ஸ்வால் 70 ரன் (40 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), பராக் 32 ரன்னுடன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குஜராத் பந்துவீச்சில் பிரசித், ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாது உலக அளவில் டி20ல் மிக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் உள்பட பல்வேறு சாதனைகளை உடைத்து நொறுக்கிய சூர்யவன்ஷி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். அவரது அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வலம் வந்துகொண்டிருக்கிறது.
அனைத்து தரப்பு பிரபலங்களும், ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். அந்த இளம் சாதனையாளனுக்கு ஜஸ்ட் நியூ சார்பிலும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறோம்.