சென்னை: இந்திய டேபிள்ஸ் டென்னிஸில் கடந்த 22 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த 42 வயதான சென்னையை சேர்ந்த சரத் கமல், சர்வதேச மற்றும் தொழில்முறை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சரத் கமல் காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்றுள்ளார். மேலும் ஆசிய விளையாட்டில் 2 வெண்கலப் பதக்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.
10 முறை தேசிய சாம்பியன் பட்டமும் வென்றுள்ள சரத் கமல், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் புரோ டூர் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் தன்னுள் வைத்துள்ளார். இந்நிலையில் வரும் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ள ‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025’ தொடருடன் சர்வதேச மற்றும் தொழில் முறை போட்டியில் இருந்து ஓய்வு பெறுதவாக சரத் கமல் அறிவித்துள்ளார்.
இந்தத் தொடருக்கு பின்னர் தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து டேபிள் டென்னிஸ் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்துள்ளார். இதன் ஒரு கட்டமாக மேலக்கோட்டையூரில் அமைய உள்ள உயர் திறன் விளையாட்டு மையத்தில் இணைய உள்ளார் சரத் கமல்.