சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே இம்முறை தொடக்கத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் பெங்களூரு, ராஜஸ்தானிடம் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில் ஹாட்ரிக் வெற்றியை குறிவைக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் தனது கோட்டையான சேப்பாக்கத்தில் இன்று (ஏப்பரல் 5) பிற்பகலில் மோதுகிறது சிஎஸ்கே அணி.
இதற்கிடையே கடந்த 30-ம் தேதி குவாஹாட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஆட்டத்தில் களமிறங்குவாரா? என்பது சந்தேகமாகி உள்ளது.
இதுதொடர்பாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறும்போது, “டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவது என்பது அவர், காயத்தில் இருந்து மீண்டு வருவதை பொறுத்தே இருக்கும். அவருக்கு இன்னும் சிறிது வலி இருக்கிறது. வலை பயிற்சியில் அவர், எவ்வாறு பேட்டிங் செய்கிறார் என்பதை பொறுத்து முடிவு செய்வோம். அவர் விளையாடவில்லை என்றால், அணியை யார் வழிநடத்துவார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.
ஆனால் எங்களிடம் ஒரு இளைஞர் உள்ளார். அவர், ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருக்கிறார். ஒருவேளை அவர், அந்த வேலையை செய்ய முடியும். அவருக்கு இந்த பணியில் அனுபவம் உள்ளது, எனவே அவர் அதைச் செய்யலாம்” என்றார்.
மைக்கேல் ஹஸ்ஸி ஸ்டெம்புகளுக்கு பின்னால் இளம் வீரர் இருக்கிறார் என்று மறைமுகமாக தோனியை குறிப்பிட்டதாகவே தெரிகிறது. ருதுராஜ் இன்றைய போட்டியில் களமிறங்காவிட்டால் தல தரிசனத்தை ரசிகர்கள் கேப்டனாக கண்டுகளிக்கலாம்.