அம்மான்
யு-15, யு-17 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டான் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா இரு பிரிவிலும் கூட்டாக 11 தங்கம் உட்பட 25 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
செவ்வாய்கிழமை நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 10 தங்கம் வென்றனர். மேலும் 4 வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர். யு-15 பிரிவில் கோமல் (30–33 கிலோ) 3:2 என்ற கணக்கில் ஸ்பிளிட் முடிவின் கீழ் கஜகஸ்தானின் ஐயாரு ஒங்கார்பெக்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

குஷி அஹ்லாவத் (35 கிலோ), தமன்னா (37 கிலோ), ஸ்வி (40 கிலோ), மில்கி மெய்னம் (43 கிலோ), பிரின்சி (52 கிலோ), நவ்யா (58 கிலோ), சுனைனா (61 கிலோ), த்ருஷனா மோஹித் (67 கிலோ), வன்ஷிகா (70+ கிலோ) ஆகியோரும் தங்கப் பதக்கம் வென்றனர்.
ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் 4 பேர் பங்கேற்றனர். இதில் சன்ஸ்கர் வினோத் (35 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார். மற்ற 3 வீரர்கள் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர். இவர்களுடன் 7 வீரர்கள் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.