புதுடெல்லி
தொடர்சியாக 2 லீக் ஆட்டங்களில் விளையாடாத யுவேந்திர சாஹல் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹல் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இதற்கு அவர், விரல் பகுதியில் அடைந்துள்ள காயமே காரணமாகும்.
காயம் காரணமாக அவர், சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாடவில்லை. நடப்பு சீசனுக்காக யுவேந்திர சாஹலை, பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரே சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் சாஹல் படைத்திருந்தார். நடப்பு தொடரில் அவர், 12 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில் யுவேந்திர சாஹல் காயத்தில் இருந்து விரைவாக குணமடைந்து வருவதாகவும், பிளே ஆஃப் சுற்றில் விளையாட அவர், ரெடியாகிவிடுவார் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2014-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றை அந்த அணி சொந்த மைதானமான முலான்பூரில் விளையாட உள்ளது.