17 வருட தவம் பயன் அளிக்குமா?
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 28) இரவு நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
ஒரு முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற சோகம் ஒருபுறம் இருந்தாலும், சென்னை சேப்பாக்கத்தில் ஒரு முறை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆர்சிபி வெற்றி பெற முடியவில்லை என்ற 17 வருட வரலாற்று சோகமும் உள்ளது.
இதை தாண்டி இந்த முறை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று காட்ட வேண்டும் என்ற ஆசை ஆர்சிபி நாயகன் விராட் கோலிக்கு உள்ளது.
18வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அடித்து விரட்டிய உற்சாகத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி.
ஆனால் சென்னை ரசிகர்கள் படைக்கு மத்தியில் சூப்பர்கிங்ஸ் அணியின் சுழல் மன்னர்கள் ஜடேஜா, நுார்அகமது, அஸ்வின் ஆகியோரை ஆர்சிபி வீரர்கள் சமாளிக்க வேண்டியது முக்கியம்.
இதை எல்லாம் தாண்டிச்சென்றால் தான் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கனி ஆர்சிபிக்கு எட்டும். கோலி, பில்சால்ட், ரஜத்பட்டிதார், லிவிங்ஸ்டன்,ஜிதேஷ்சர்மா ஆகியோர் இந்தமுறை ஆர்சிபி பேட்டிங்கிற்கு வலுசேர்த்தாலும் டோனியின் வியூகத்தை தாண்டி, சென்னை ரசிகர்களையும் சமாளிக்க வேண்டும். இந்த முறை அதிர்ஷ்டம் ஆர்சிபிக்கு கைகொடுக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.