கொல்கத்தா
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி புதிய கேப்டனான அஜிங்க்ய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. 3 முறை சாம்பியனான அந்த அணி தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சனிக்கிழமை (22-ம் தேதி) ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது.
கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறி உள்ளதால் அனுபவம் வாய்ந்த அஜிங்க்ய ரஹானே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டரில் சுனில் நரேன், குயிண்டன் டி காக், அஜிங்க்ய ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரஹ்மனுல்லா குர்பாஸ் பலம் சேர்க்கக்கூடும். நடுவரிசையில் மணீஷ் பாண்டே, ரோவ்மன் பாவெல், அங்க்கிரிஷ் ரகுவன்ஷி நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள் பின்வரிசையில் ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங் ஆகியோரின் தாக்குதல் ஆட்டம் பலம் சேர்க்கக்கூடும்.
பந்துவீச்சில் புதிர் சுழற்பந்து வீச்சாளர்ளான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால்தரக்கூடும். இவர்களுடன் மொயின் அலியும் பலம் சேர்க்கக்கூடும். வேகப்பந்துவீச்சில் அன்ரிச் நோர்க்கியா, ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜாண்சன், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

ரஹானே ஐபிஎல் தொடரில் கேப்டனாக கடந்த காலங்களில் சாதித்தது இல்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே 24 போட்டிகளில், 9-ல் மட்டுமே வெற்றி கண்டார். 2017-ம் ஆண்டில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தியபோது ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தார். இதனால் இந்த சீசன் ரஹானேவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.