தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
மும்பை
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.
இதில் 25 வயதான ஷுப்மன் கில் கேப்டனாக நியமியக்கப்பட்டுள்ளார். ஜஸ்பிரீத் பும்ராவின் உடற்தகுதி மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வுக்கு பின்னர் அகர்கர் கூறும்போது, “இந்திய அணியின் மருத்துவக்குழு கூறியதன் அடிப்படையில் பார்க்கையில், இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாடவே வாய்ப்பிருக்கிறது. மூன்று அல்லது நான்கு போட்டிகளில் விளையாடினாலும், அணிக்காக போட்டியை வென்று கொடுப்பவர் அவர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தின்போது, ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது, அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முழுமையாக விளையாட முடியாவிட்டாலும், அவர் அணியில் இடம்பெற்றுள்ளதே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.