அகமதாபாத்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. எனினும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றை முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்வதில் தீவிரம் காட்டக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 20 புள்ளிகளை எட்டும். பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் 19 புள்ளிகளுடனே தொடரை நிறைவு செய்யும். அதேவேளையில் மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 18 புள்ளிகளை அடையும்.பஞ்சாப் கிங்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளையே எட்ட முடியும்.
குஜராத் அணி தனது கடைசி ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக தோல்வி கண்டிருந்தது. 236 ரன்கள் இலக்கை துரத்திய அந்த ஆட்டத்தில் குஜராத் அணி 33 ரன்கள் விதியாசத்தில் வீழ்ந்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் டாப் ஆர்டரில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். மேலும் பந்துவீச்சு துறையும் எழுச்சி காண முயற்சிக்கக்கூடும்.
நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சிஎஸ்கே அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும். ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் தங்களுக்கான இறுதி வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.