புதுடெல்லி
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது புதிய கேப்டன் அக்சர் படேல் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணி இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2020-ம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து முதன்முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அடுத்த ஆண்டில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய டெல்லி அணி கடந்த 3 சீசன்களிலும் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.
இம்முறை கே.எல்.ராகுல், டு பிளெஸ்ஸிஸ் வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆகியோரும் பேட்டிங்கில் அதிரடியாக செயல்படக்கூடியவர்கள். இவர்களுடன் கருண் நாயரும், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

இதேபோன்று வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் வருகை உத்வேகம் அளிக்கக்கூடும். அவருடன் டி.நடராஜன், முகேஷ் குமார், அனுபவம் வாய்ந்த மோஹித் சர்மா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
சுழற்பந்து வீச்சில் கேப்டன் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்கள். எனினும் இவர்களை தவிர்த்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவில் அணியில் வேறு வீரர்கள் இல்லை.

ஐபிஎல் போட்டிகளில் அக்சர் படேலுக்கு கேப்டனாக பெரிய அளவில் அனுபவம் கிடையாது. ஆனால் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அபாரமாக செயல்பட்டிருந்தார் இதனால் அவரது கேப்டன்சியை காண டெல்லி ரசிகர்கள் வெயிட்டிங்.