அகமதாபாத்:
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச் 25) அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் 42 பந்தகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷஷாங் சிங் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி மிரட்டினார்.
இறுதிக்கட்ட ஓவர்களில் அவர், மேற்கொண்ட தாக்குதல் ஆட்டமே போட்டியின் முடிவில் பெரிய வித்தியாசத்தை காட்டியது. முன்னதாக தொடக்க வீரரான பிரியன்ஸ் ஆர்யா 23 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்திருந்தார். இதையடுத்து 244 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ்அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற போதிலும் அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் சதம் அடிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு வருத்தமாகவே மாறிவிட்டது. ஏனெனில் ஷ்ரேயாஷ் ஐயருக்கு கடைசி 3 ஓவர்களில் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதற்கு காரணம் ஷஷாங் சிங்கின் ருத்ரதாண்டவமே. கடைசி ஓவரில் கூட அனைத்து பந்துகளையும் அவரே எதிர்கொண்டார்.
போட்டி முடிவடைந்ததும் ஷஷாங் சிங் கூறியதாவது:
உண்மையை கூறவேண்டுமெனில் நான் முதலில் ஸ்கோர்போர்டை பார்க்கவில்லை. கடைசி ஓவரின் முதல் பந்தை நான் அடித்த பிறகே ஸ்கோர்போர்டைப் பார்த்தேன், ஷ்ரேயாஷ் ஐயர் 97 ரன்களில் இருந்தார். அப்போது நான், அவரிடம் சென்று சிங்கிள் எடுக்க வேண்டுமா என்று கேட்டேன். ஆனால் அவரோ, தனது சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். இதைச் சொல்ல நிறைய இதயமும் தைரியமும் தேவை, ஏனென்றால் டி20 போட்டிகளில், குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சதங்கள் எளிதாக வருவதில்லை. ஷ்ரேயாஷ் ஐயரின் வார்த்தைகள் எனக்கு அதிக நம்பிக்கையைக் கொடுத்தது.
கிரிக்கெட் ஒரு டீம் கேம் என நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த சூழ்நிலைகளில், தன்னலமற்றவராக இருப்பது கடினம், ஆனால் ஷ்ரேயாஷ் அப்படி இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவரை, எனக்கு தெரியும். இப்போதும் அவர், அப்படியே இருக்கிறார். அவர், என்னிடம் கூறியது இதுதான்.. அமைதியாக இருந்து வழக்கமாக விளையாடும் கிரிக்கெட் ஷாட்களை விளையாடு என்றார். அது எனது ஆட்டத்தை பேலன்ஸ் செய்ய உதவியது. கடவுளின் அருளால், நாங்கள் ஆட்டத்தை வெற்றிகரமாகவும் நிறைவு செய்துவிட்டோம்.
ஒரு கேப்டனாக ஷ்ரேயாஸ் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படுபவர். அதனால்தான் அவர் இப்போது உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருக்கிறார். வைஷாக்கை பந்து வீச்சில் கொண்டுவருவதற்கு அதுதான் சரியான நேரம் என்று நினைத்தோம். அவரும் அற்புதமாக செயல்பட்டார். பந்துவீச்சு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழக்கமாக இதுபோன்ற விஷங்களை திட்டமிடுகிறோம். எனவே இது எல்லாமே திட்டமிட்ட விஷயமே. அவர் திட்டத்தைச் செயல்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. பனிப்பொழிவு இருந்ததால் அவர் வீசிய ஓவர்கள் மிகவும் கடினமாது.
இதுபோன்ற தருணங்களையே வெல்ல வேண்டும். வைஷாக் வந்தார், அதைச் சிறப்பாகச் செய்தார். அந்த யார்க்கர்களை வீசுவது மிகவும் கடினம், ஆனால் அவர் தனது வேலையை முழுமையாகச் செய்தார், அவருக்குப் பாராட்டுகள்.
இவ்வாறு ஷஷாங் சிங் கூறினார்.