Dublin

ஒருநாள் போட்டி தொடரை சமன் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள்

டப்ளின்

அயர்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் தொடரை 1-1 என சமனில் முடித்தது.

 டப்ளின் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது. கீசி கார்ட்டி 142 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 170 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 75 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் விளாசினர்.

 அயர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் பாரி மெக்கார்த்தி 3, லியாம் மெக்கார்த்தி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அயர்லாந்து அணி இலக்கை துரத்திய நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதையடுத்து 46 ஓவர்களில் 363 ரன்கள் அடிக்க வேண்டும் அயர்லாந்து அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை துரத்திய அயர்லாந்து அணி 29.5 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக கேட் கார்மைக்கேல் 48, லார்கன் டக்கர் 29, ஆண்டி மெக்பிரின் 28, பால் ஸ்டிர்லிங் 26 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 1-1 என சமனில் முடித்தது. முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top