சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்பரல்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி கே.எல்.ராகுலின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.
கே.எல்.ராகுல் 51 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அபிஷேக் போரெல் 20 பந்துகளில் 33 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்களும் விளாசினர். 184 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
சிஎஸ்கேவுக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. அதேவேளையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. நடப்பு ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்கடித்திருந்தது. அந்த அணி 18 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வென்றிருந்தது. இதேபோன்று தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2010-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறும்போது, “ இந்த ஆட்டம் மட்டும் இல்லை, கடந்த 3 ஆட்டங்களுமே எங்கள் வழியில் அமையவில்லை. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 துறைகளிலும் எங்களால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயன்றோம். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பவர்பிளேவில் நாங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இது 2-வது ஆட்டத்தில் இருந்தே தொடர்கிறது. நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சி செய்கிறோம்.
ஆனால் அது நடைபெறவில்லை. பவர்பிளேயில் யார் பந்து வீச வருகிறார்கள் என்பதில் நாங்கள் அதிக அக்கறை காட்டுகிறோம் முதல் அல்லது இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்து வருகிறோம். பேட்டிங் வரிசையை எவ்வளவு ஆழமாக எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு ஆழமாக எடுத்துச் செல்வதே திட்டம். டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியது. ஷிவம் துபே பேட்டிங் செய்யும் போது கூட, நாங்கள் விவேகத்தை எதிர்பார்த்தோம், ஆனால் எங்களால் அதை பெற முடியவில்லை”என்றார்.