மும்பை
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரின் தொடர்ச்சியாக தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விராட் கோலி தனது எக்ஸ் வலைதள பதிவில், “இக்கட்டான நேரத்தில் நாட்டை பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம். இந்த நாயகர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் தியாகங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு கிரிக்கெட் நட்சத்திரமான கே.எல்.ராகுல் தனது பதிவில்,“எங்கள் மதிப்பிற்குரிய ராணுவ வீரர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் நிற்கும் குடும்பங்களுக்கும் – உங்கள் துணிச்சல், தியாகம் மற்றும் வலிமைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஒரு தேசமாக, நாங்கள் உங்கள் பின்னால் உறுதியாக நிற்கிறோம், எங்களைப் பாதுகாப்பதற்கு நன்றி. ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.