ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. எனினும் தொடரின் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்களில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர்கள் கவனம் ஈர்த்தனர். இதில் வன்ஷ் பேடிக்கு பதிலாக ரூ.30 லட்சத்துக்கு சிஎஸ்கே அணியில் இணைந்த உர்வில் படேல் தனது அதிரடியால் நடுஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்த்ததுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 26 வயதான உர்வில் படேல், 3 ஆட்டங்களில் 212.30 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இருந்தார்.
இந்நிலையில் உர்வில் படேல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தோனியை வெகுவாக புகழ்ந்துள்ளார். இததொடர்பாக அவர் கூறும்போது, “தோனி தலைமையில் விளையாடும் நம்பமுடியாத வாய்ப்பு எனக்கு கிடைத்ததுக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளேன்.‘தல’ உடன் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் அமைதி, தலைமைப் பண்பு, தன்னடக்கம் என எல்லாமே மாஸ்டர்கிளாஸாக இருந்தன.
அவருடன் இருந்தில் நிறைய கற்றுக்கொண்டேன். அவரது வழிகாட்டுதலில் வளர ஆசைப்படுகிறேன். ஓய்வறை, களத்தில் அவருக்கு அருகில் இருந்த ஒவ்வொரு நொடியும் கனவு நனவானது போல் இருந்தது. கூடுதல் சிறப்பானது என்னவென்றால் இதையெல்லாம் எனது குடும்பமும் அங்கிருந்து அனுபவித்தார்கள். இவை மறக்க முடியாத தருணங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.