பாங்காக்
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகளான உனதி ஹூடா, மாளவிகா பன்சோத் ஆகியோர் 2-வது சுற்றில் தோல்வி அடைந்தனர்.
பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் 17 வயதான உனதி ஹூடா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சொச்சுவாங்கை எதிர்த்து விளையாடினார். 39 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சொச்சுவாங் 21-14, 21-11 என்ற செட் கணக்கில் உனதி ஹூடாவை வீழ்த்தினார்.
உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மாளவிகா பன்சோத், முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசயில் 5-வது இடத்தில் உள்ளவருமான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்த்து விளையாடினார். இதில் மாளவிகா 12-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப் 9-21, 14-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுபானிடா காடேதாங்கிடம் தோல்வி அடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 20-22, 14-21 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ரூயி ஹிரோகமி, சயகா ஹோபரா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தரவரிசையில் 53-வது இடத்தில் இந்தியாவின் தருண் மானேப்பள்ளி 14-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சென்னிடம் வீழ்ந்தார்.