தல தோனி ‘பளிச்’ பேட்டி
சென்னை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த போதிலும், அவரின் பின்புறம் இருந்து அனைத்து முடிவுகளையும் எம்.எஸ்.தோனியே எடுத்துவருவதாக வெளிவரும் தகவல்களை தோனி மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக தோனி ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் கூறியதாவது:
பேட்ஸ்மேன்கள் இப்போது ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளனர். சரியான கிரிக்கெட் ஷாட்கள் இருந்தால், பெரிய ஸ்ட்ரோக்குகளை விளையாட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள், அதே நேரத்தில், அவர்கள் தங்கள் ஷாட் தேர்வையும் மேம்படுத்துகிறார்கள். அது வேகப்பந்து வீச்சாளருக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்கூப்பாக இருந்தாலும் சரி, ஸ்வீப்பாக இருந்தாலும் சரி, ரிவர்ஸ் ஸ்வீப்பாக இருந்தாலும் சரி.
நானும் வித்தியாசமானவன் அல்ல, ஷாட்களை மாற்றியமைக்க வேண்டும். நான் பேட்டிங் செய்யும் இடத்திற்கு இதுதான் தேவை. ஷாட்கள் மேற்கொள்ள முயற்சி செய்து அணிக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். 2008-ம் ஆண்டில் நாங்கள் டி20 விளையாடிய விதமும், கடந்த ஆண்டு ஐபிஎல் விளையாடிய விதமும் மிகவும் வித்தியாசமானது. முன்பெல்லாம் ஆடுகளங்களில் நிறைய ‘டர்ன்’ இருந்தன. ஆடுகளங்கள் இருவிததமாக செயல்படும். ஆனால் இப்போது, இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் மிகவும் மாறியுள்ளன. பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளன.
ருதுராஜ் சில காலமாக எங்களில் ஒரு பகுதியாக இருக்கிறார். மனதளவில் அவர், சிறப்பானவர். மிகவும் அமைதியானவர். அதனால்தான் அவரை தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவராக கருதினோம். இதன் அடிப்படையிலேயே 2024-ல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சீசன் தொடங்குவதற்கு முன்னர், நான் அவரிடம் சொன்னேன், ‘நான் உங்களுக்கு ஆலோசனை வழங்கினால், நீங்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அர்த்தமல்ல. நான் முடிந்தவரை விலகி இருக்க முயற்சிப்பேன். அந்த சீசனின் போது, நான் பின்னணியில் இருந்து முடிவுகளை எடுக்கிறேன் என்று நிறைய பேர் ஊகித்தனர்.
ஆனால் உண்மை என்னவென்றால், ருதுராஜ் கெய்க்வாட்டே 99 சதவீத முடிவுகளை எடுத்தார். மிக முக்கியமான முடிகளான பந்துவீச்சு மாற்றங்கள், பீல்டிங் பிளேஸ்மென்ட் என அனைத்தையும் அவருடையது. நான் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். வீரர்களை கையாள்வதில் அவர், அற்புதமாக செயல்பட்டார்.
விராட் கோலிக்கும் எனக்கும் இடையே கருத்து பரிமாற்றங்கள் அதிகம் இருந்தன. ஆரம்பத்தில், இது ஒரு கேப்டனுக்கும் இளம் வீரருக்கும் இடையிலான உறவாக இருந்தது, ஆனால் தொடர்ந்து பழகப் பழகப் காலப்போக்கில், நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். இன்றும், நாங்கள் அந்த பிணைப்பை பகிர்ந்து கொள்கிறோம், இருப்பினும் ஒரு சீனியருக்கும் ஜூனியருக்கும் இடையே எப்போதும் ஒரு மரியாதை கோடு உள்ளது. இப்போது நாங்கள் இருவரும் கேப்டனாக இல்லாததால், போட்டிகளுக்கு முன்பு பேச எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது.
இவ்வாறு தோனி கூறியுள்ளார்.