சென்னை
சென்னை அடுத்த கவரப் பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி, சாய்ராம் பொறியியல் கல்லூரி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆர்எம்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சுந்தரேஷன் 54, விக்னேஷ் 43 ரன்கள் விளாசினர். 171 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சாய்ராம் அணி 19.5 ஓவர்களில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிந்திரன் குரு சாய் 3 ஓவர்களை வீசி 12 ரன்களை மட்டும் வழங்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார். 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ஆர்எம்கே கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரை இறுதியில் லயோலா, சத்தியபாமா பல்கலைக்கழக அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சத்தியபாமா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. சச்சின் 35, மகேஷ் 21 ரன்கள் எடுத்தனர். 111 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லயோலா அணி 13.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பிரதீப் 30 பந்துகளில் 52 ரன்களும், ராகுல் 37 பந்துகளில் 43 ரன்களும் சேர்த்தனர்.
வரும் 15ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்எம்கே, லயோலா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 3வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதியில் தோல்வி அடைந்த சாய்ராம் கல்லூரி, சத்தியபாமா அணிகள் மோதுகின்றன.