ஐதராபாத்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்தபஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 82 ரன் (36 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் 42 ரன் (23 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 34 ரன்கள் விளாசினர். ஐதராபாத் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 4, இஷான் மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, மிக மிகக் கடினமான இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நம்ப முடியாத வெற்றியை வசப்படுத்தியது. அபிஷேக் 141 ரன்கள் (55 பந்து, 14 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசி மிரள வைத்தார். டிராவிஸ் ஹெட் 66 ரன் (37 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற அபிஷேக் சர்மா கூறும்போது, “இந்த சீசனில் தொடக்க ஆட்டங்களில் நான் சரியாக விளையாடவில்லை. ஆனால், அணி நிர்வாகமும், கேப்டன் பாட் கம்மின்ஸும் என் மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. ஆடுகளத்தில் இருந்த பவுன்ஸ் காரணமாக பின்புறம் சில ஷாட்டுகளை அற்புதமாக விளையாடினேன்.
இந்த போட்டியில் எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பானது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். இளம் வீரராக அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடிமனாக இருந்தது” என்றார்.