சென்னை
தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் 79-வது மாநில சீனியர் நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல்குள வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இம்மாதம் (ஜூன்) 22ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா ஸ்டேடியத்தில் உள்ள நீச்சல்குள வளாகத்தில் நடைபெறும் 78-வது சீனியர் தேசிய போட்டிக்கான தமிழக அணியை தேர்வு செய்யும் போட்டியாக இது அமைவதால் முன்னணி நீச்சல் வீரர், வீராங்கனைகள் பலரும் இதில் பங்கேற்று வருகின்றனர்.
துவக்க நாளான நேற்று நடைபெற்ற சீனியர் ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த பெனடிக்டன் ரோகித் (டி.டி.எஸ்.ஏ.அணி) போட்டி தூரத்தை 53.72 வினாடிகளில் நீந்தி கடந்து தனது சாதனையை தானே முறியடித்தார். முன்னதாக இவர் 54.78 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்து வந்தது. அதனை இப்போது பெனடிக்டன் முறியடித்துள்ளார்.
பின்னர் நடைபெற்ற ஆண்களுக்கான 200மீ. தனிநபர் மெட்லி நீச்சலில் பெனடிக்டன் ரோகித் போட்டி தூரத்தை 02 நிமிடம் 08.24 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தார். ஏறக்குறைய 14 ஆண்டு காலமாக அதாவது 2011ம் ஆண்டில் டர்ட்ல்ஸ் அணி வீரர் ஜெ.அக்னீஸ்வர் 02 நிமிடம் 09.44 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை தற்போது பெனடிக்டன் முறியடித்து உள்ளார்.
ஆண்களுக்கான 50மீ. பிரஸ்ட்ரோக் நீச்சலில் சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால்பின் அணி வீரர் யாதேஷ் பாபு போட்டி தூரத்தை 28.51 வினாடிகளில் நீந்தி தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் 29.06 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 50மீ. ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் எஸ்.ஏ.வி. டைடன்ஸ் அணி வீரர் ஜாஷ்வா தாமஸ் போட்டி தூரத்தை 23.08 வினாடிகளில் கடந்து, 2023ம் ஆண்டு அக்வாடிக் மதுரை அணி வீரர் பி.விகாஷ் சாதனையை முறியடித்துள்ளார்.