ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 283 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டத்தில் 83.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. மார்க்ரம் 207 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் விளாசினார். தெம்பா பவுமா 134 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார்.
இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வானார். ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி 27 வருடங்களுக்கு பிறகு தற்போது தெம்பா பவுமா தலைமையில் பட்டம் வென்றுள்ளது. இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போனது.
தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறும்போது, “எப்போதும் விஷயங்கள் விரைவாக மாறக்கூடும், ஆனால் அது இங்கு மிகத் தொலைவில் இருந்தது. சில விஷயங்களை நாங்கள் சரியாகச் செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் நல்ல முன்னிலை பெற்ற பிறகும் எதிரணியை வீழ்த்தவில்லை. 4-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி எங்களுக்கு ஒரு வாய்ப்பைகூட கொடுக்கவில்லை. மார்க்ரம், டெம்பா பவுமா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு எந்தவித வாய்ப்பையும் கொடுக்கவில்லை.
இது தென் ஆப்பிரிக்க அணி ஏன் இங்கே இருக்கிறார்கள் என்பதையும், வெற்றியாளர்களாக இருக்க தகுதியானவர்கள் என்பதையும் காட்டியது, அவர்கள் ஆட்டம் முழுவதும் தங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். இது உச்சம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பக் கூடியவன். இறுதிப் போட்டிக்கு வந்தது மிகப்பெரிய சாதனை, ஷூட்அவுட் ஆக அமைந்த ஆட்டம் சரியான பக்கத்தில் முடிவடையவில்லை, ஆனால் இது சிறந்த வாரமாக அமைந்தது” என்றார்.