Logo

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகளுக்கு அனுமதி

புதுடெல்லி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்குக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் போட்டி அமைப்பாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் 6 அணிகள் மட்டுமே கலந்து கொள்ளும் என உறுதி செய்துள்ளனர்.

ஆடவர் பிரிவில் 6 அணிகளும், மகளிர் பிரிவில் 6 அணிகளும் கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. இதில் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ் அணிகள் விளையாடி இருந்தன. இந்த இரு அணிகள் இரு நாட்கள் கொண்ட ஆட்டத்தில் மோதியிருந்தன.

இம்முறை லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் டி 20 வடிவில் இடம் பெறுகிறது. ஒவ்வொரு அணியிலும் தலா 15 வீரர்கள் இடம் பெறுவார்கள். இந்த வகையில் ஆடவர் பிரிவில் மொத்தம் 90 வீரர்களும், மகளிர் பிரிவில் மொத்தம் 90 வீராங்கனைகளும் இடம் பெற வேண்டும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்க, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய 12 நாடுகள் முழு நேர உறுப்பினர்களாக உள்ளன. இத்துடன் 94 நாடுகள் இணை உறுப்பினர்களாக உள்ளது.

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கான தகுதி அளவுகோல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் விளையாட்டை நடத்தும் உரிமையை பெற்றுள்ளதன் அடிப்படையில் அமெரிக்க அணி நேரடியாக தகுதி பெறக்கூடும். இதனால் 5 அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என கருதப்படுகிறது. இந்த 5 அணிகளும் ஒரு குறிப்பிட்ட கட்-ஆஃப் தேதிக்குள் ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் தேர்வாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top