அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச் 25) அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் 42 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷஷாங் சிங் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி மிரட்டினார்.
இறுதிக்கட்ட ஓவர்களில் அவர், மேற்கொண்ட தாக்குதல் ஆட்டமே போட்டியின் முடிவில் பெரிய வித்தியாசத்தை காட்டியது. முன்னதாக தொடக்க வீரரான பிரியன்ஸ் ஆர்யா 23 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்திருந்தார். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் 4 ஓவர்களை வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இதையடுத்து 244 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான சாய் சுதர்சன் 41 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார். ஜாஸ் பட்லர் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் ஷெர்பேன் ரூதர்போர்டு 28 பதுகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன 46 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ஷுப்ன் கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருவகையில் வெற்றியை கோட்டைவிட்டது என்றே கூற வேண்டும். அந்த அணி 11, 12, 13, 14 ஓவர்களில் முறையே 17, 17, 14, 17 ரன்கள் விளாசியது. ஆனால் அடுத்த 3 ஓவர்களில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் சாதுர்யமாக செயல்பட்டு ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். 15, 16, 17-வது ஓவர்களில் முறையே 5, 8,5 ரன்களை மட்டுமே வழங்கினர்.
இதில் வைஷாக் விஜயகுமார் 2 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அர்ஷ்தீப் சிங், கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் ஆகியோரது ஆலோசனையின் படி வைஷாக் விஜயகுமார் அதிக அளவிலான வைடு யார்க்களை கையாண்டு ஷெர்பேன் ரூதர்போர்டை முடக்கினார்.
வைடு யார்க்கர்களுக்கு எதிராக ரூதர்போர்டு எந்தவிதமான வித்தியாசமான ஷாட்களை மேற்கொள்ள முயற்சிக்காததும் பஞ்சாப் அணிக்கு சாதகமாக அமைந்தது. மேற்கண்ட இந்த 3 ஓவர்களில்தான் குஜராத் அணி வெற்றியை தொலைத்தது. ஏனெனில் அந்த அணி தோல்வி அடைந்த ரன்களின் வித்தியாசம் 11 மட்டுமே. அதேவேளையில் முக்கியமான கட்டத்தில் சாய் சுதர்சன், ரூதர்போர்டு விக்கெட்களை கைப்பற்றியதுடன் மற்ற பந்து வீச்சாளர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்தும் அசத்தினார் அர்ஷ்தீப் சிங்.

ஆட்ட நாயகன் விருது வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:
இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தது எங்களுக்கு கேக் மீது ஐசிங் ஆகும். நான் எதிர்கொண்ட முதல் பந்தில் ஒரு பவுண்டரி அதுவே என்னை தூண்டியது. ரபாடா வீசிய பந்தில் ஃபிளிக் ஷாட்டில் சிக்ஸர் விளாசியதும் சிறப்பாக இருந்தது. ஷஷாங்க் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தது அணிக்கு மிகவும் முக்கியமானது.
நாங்கள் அதை அடைய வேண்டும் என்று ஒரு அளவுகோலை அமைத்தோம். ஆட்டத்தின் பிற்பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் விஷயங்கள் மாறக்கூடும் என கருதினோம். அந்த வகையில் ஷஷாங்க் அபாரமான செயல் திறனை வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் வைஷாக் விஜயகுமார் ஒரு வேடிக்கையான கதாபாத்திரம்.
அவரிடம் சரியான அணுகுமுறையுடன் வரும் பண்புகள் உள்ளன. அவர் நேராக யார்க்கர்களை வீசினார். அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தார். வைடு யார்க்கர் திட்டங்களில் அர்ஷ்தீப் முக்கிய பங்கு வகித்தார். அவர், என்னிடம் வந்து பந்து சற்று ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது எனக்கூறினார். அப்போதுதான் உமிழ்நீர் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவுகிறது என்று நினைத்தேன்.
அர்ஷ்தீப் சிங், சாய் சுதர்சனை அவர் ஆட்டமிழக்கச் செய்ததே ஆட்டத்தின் போக்கு எங்கள் பக்கம் திரும்பியது. இதன் பின்னர் அர்ஷ்தீப் மற்றொரு ஐடியா கூறினார். மிகவும் தாமதமாக முயற்சிப்பதை விட வைடு யார்க்கர்களை முன்னதாகவே தொடங்குவோம் என்று கூறினார். அதை களத்தில் செயல்படுத்தினோம். சீசன் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் எந்த முயற்சியையும் விட்டுவிடவில்லை. எங்கள் சந்திப்புகளில், மைதானத்தில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர். மற்ற ஆட்டங்களிலும் இந்த உத்வேகத்தை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முயற்சி செய்வோம்.
இவ்வாறு ஷ்ரேயாஸ் ஐயர் கூறினார்.