Shewag

ஆர்சிபி கொஞ்சம் அறிவை பயன்படுத்தனும்… சேவாக் விளாசல்!

பெங்களூரு

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 18) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி – பஞ்சாப் அணிகள் மோதின. மழை காரணமாக 14 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக டிம் டேவிட் 26 பந்துகளில், 50 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக சற்று தாக்குப்பிடித்து விளையாடிய கேப்டன் ரஜத் பட்டிதார் 23 ரன்கள் எடுத்தார். பில் சால்ட் (4), விராட் கோலி (1), லியாம் லிவிங்ஸ்டன் (4), ஜிதேஷ் சர்மா (2), கிருணல் பாண்டியா (1), மனோஜ் பன்டேஜ் (1), யாஷ் தயாள் (0) புவனேஷ்வர் குமார் (8) ஆகியோர் ஒற்றை இலக் ரன்னில் நடையை கட்டினர்.

ஆர்சிபி அணியை கட்டுப்படுத்தியதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மார்கோ யான்சன், யுவேந்திர சாஹல் ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர். யான்சன் 3 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அதேவேளையில் யுவேந்திர சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

96 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் 12.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 98 ரன்கள் எடுத்து வெற்றிக் கோட்டை கடந்தது. பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் பிரியன்ஷ் ஆர்யா 16, பிரப்சிம்ரன் சிங் 13, ஸ்ரேயஸ் ஐயர் 7, ஜோஷ் இங்லிஷ் 14 ரன்களில் நடையை கட்டினர். 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் இடது கை பேட்ஸ்மேனான நேஹல் வதேரா 19 பந்துகளில், 33 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக் பாதைக்கு அழைத்து சென்றார்.

பஞ்சாப் அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் 7 ஆட்டங்களில் 3-வது தோல்வியை சந்தித்த ஆர்சிபி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் சொந்த மண்ணில் ஆர்சிபி அணியின் ஹாட்ரிக் தோல்வியாக இது அமைந்தது. அந்த அணி இங்கு விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தவில்லை.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்கள் கொஞ்சமாவது அறிவை பயன்படுத்தியிருக்க வேண்டும் என முன்னாள் அதிரடி வீரரான வீரேந்திர சேவாக் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஆர்சிபி மோசமாக பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் பொறுப்பற்ற ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்தனர். ஒரு பேட்ஸ்மேன் கூட நல்ல பந்தில் அவுட் ஆகவில்லை. குறைந்த பட்சம் ஒரு பேட்ஸ்மேனாவது பொது அறிவைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் கையில் விக்கெட்டுகள் இருந்திருந்தால் 14 ஓவர்களில் 110 அல்லது 120 ரன்களை எட்டியிருப்பார்கள். அது அவர்களுக்கு போராடுவதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கும்.

விக்கெட் வீழ்த்துவதற்கும், விக்கெட் பெறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் யோசித்து ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும். இந்த சீசனில் அவர்கள், சொந்த மண்ணில் வெற்றி பெறவில்லை. அவர்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள், ஆனால் அவர்களின் பேட்ஸ்மேன்கள் ஏன் தொடர்ந்து தடுமாறுகிறார்கள்? சொந்த மண்ணில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்புவது சரியில்லை. இதை யார் சரி செய்யப் போகிறார்கள்?” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top