டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கியதற்காக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி அதிகாரி ஐசிசிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இந்தத் தொடரி பி பிரிவில் இடம் பெற்றிருந்த வங்கதேச அணி, இந்தியா வந்து விளையாட மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த அணியை ஐசிசி நீக்கியது. மேலும் மாற்று அணியாக ஸ்காட்லாந்து அணியை டி 20 உலகக் கோப்பையில் சேர்த்தது ஐசிசி.
இந்நிலையில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டோரி லிண்ட்ப்ளேட் கூறும்போது, “டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான அழைப்பு ஐசிசியின் தலைவர் ஜெய் ஷாவிடம் இருந்து வந்துள்ளதை வரவேற்கிறேன் அணியின் சார்பாக இந்த அழைப்பை ஏற்பதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு ஐசிசி-க்கு நன்றி” என்றார்.

