சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் சச்சின் தலைமையில் களம் கண்ட இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த இறுதிப்போட்டியை காண சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் குவிந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் சச்சின், சச்சின் கோஷம் தான். ஓய்வு பெற்று இத்தனை ஆண்டுக்கு பிறகும் மாஸ்டர் லீக் போட்டியில் 181 ரன் குவித்தார்.
குறிப்பாக அவரது வழக்கமான ஸ்ட்ரெய்ட் டிரைவ்கள், புல்ஷாட், அப்பர் கட், கவர் டிரைவ் ஆகியவற்றை மீண்டும் பார்க்க முடிந்தது கண்கொள்ளா காட்சி.
ஆஸிக்கு எதிராக அரையிறுதியில் அவர் விளாசிய 64 ரன்கள், இறுதிப்போட்டியில் அதிரடி காட்டி எடுத்த 25 ரன்கள் இதில் முக்கியமானவை. குறிப்பாக இறுதிப்போட்டியில் மைதானத்தில் வைக்கப்பட்ட பெரிய திரையில் சச்சின் முகத்தை காட்டும் போது எல்லாம் சச்சின்…சச்சின் கோஷம் விண்ணதிர எழுந்தது இன்னும் சிறப்பு.