புதுடெல்லி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
38 வயதான ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 18 அரை சதங்களுடன் 4,301 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது சராசரி 40.57 ஆகும்.
கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வென்ற பிறகு சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருந்த ரோஹித் சர்மா, தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் குட்பை கூறியுள்ளார். இனிமேல் அவர், இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடக்கூடும்.
ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு முழுமையான மரியாதை.

பல ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதை தொடர்ந்து இந்திய அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ முனைப்பு காட்டக்கூடும். புதிய கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா, கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.