தரம்சாலா
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
236 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தோல்வி சந்தித்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 40 பந்துகளில், 74 ரன்களும் அப்துல் சமத் 24 பந்துகளில் 45 ரன்களும் விளாசினர்.
லக்னோ அணிக்கு இது 6-வது தோல்வியாக அமைந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் சேர்த்து பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தற்போதைய தோல்வியால் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கடினமாகி உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறும்போது, “ பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் எங்களது கனவு இன்னும் உயிர்ப்பிப்புடன் இருக்கிறது. அடுத்த 3 ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற்றால், நிச்சயமாக சூழ்நிலையை மாற்றி அற்புதமான விஷயங்களை செய்ய முடியும். பந்துவீச்சில் அதிகமான ரன்களை வழங்கிவிட்டோம்.
முக்கியமான கேட்ச்களை தவறவிட்டால், அது உங்களை மோசமாக காயப்படுத்தும். தொடக்கத்திலேயே நாங்கள் சிறந்த லென்ந்தில் பந்துவீசவில்லை. ஒவ்வொரு போட்டியிலும், டாப் ஆர்டர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்ப முடியாது. சில நேரங்களில் பேட்டிங்கை நாங்கள் ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.