மும்பை
காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பும்ரா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் காயம் அடைந்தார். அதன் பின்னர் அவர், எந்தவிதமான கிரிக்கெட் போட்களிலும் பங்கேற்கவில்லை. காயத்துக்காக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பும்ராவுக்கு உடற்தகுதி சான்றிதழை பிசிசிஐ வழங்கி உள்ளதாகவும் இதனால் அவர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று (ஏப்ரல் 6) இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் அவர், 7-ம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிராக ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு இல்லை. இரு பயிற்சி ஆட்டங்களுக்கு பின்னர் வரும் 13-ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.