புதுடெல்லி
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்பரல் 27) டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் சேர்த்தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்ஸிஸ் 22 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணி சார்பில் புவேன்ஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புப்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிருணல் பாண்டியா 47 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன 73 ரன்களும், விராட் கோலி 47 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன 51 ரன்களும் விளாசினர். டிம் டேவிட் 5 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார்.
ஆர்சிபி அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

டெல்லி அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறும்போது, “இது ஒரு முழுமையான அணியின் செயல்திறன். பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம் பார்க்க நன்றாக இருந்தது.
நான் முன்பு கூறியது போல், நாங்கள் மைதானங்களை பார்த்து விளையாடும் அணி அல்ல. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். சேஸிங் என்பது ஆடுகளம், பந்துவீச்சு மற்றும் ஸ்கோர் குறித்து நிறைய தெளிவை அளிக்கிறது, அதற்கேற்ப நாங்கள் திட்டமிடலாம்.
இது அடையக்கூடிய இலக்குதான். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பாராட்டுகள் அனைத்தும் அவர்களையே சேரும். சேஸிங் விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.
ர்சிபியை வழிநடத்தும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளனர். கற்றுக்கொள்ள எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு” என்றார்.