Pataudi Medal

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடி பதக்கம்

புதுடெல்லி

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. வழக்கமாக இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் பட்டோடி டிராபி என்றே அழைக்கப்படும்.

இந்நிலையில் இம்முறை இந்த தொடரின் பெயரை டெண்டுல்கர் – ஆண்டர்சன் டிராபி என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்றியது. இதுதொடர்பாக முறையான அறிவிப்பை கடந்த வாரம் முடிவடைந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது வெளியட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. ஆனால் அது, அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கோப்பையின் பெயரை மாற்றியமைத்ததற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் போன்றவர்களிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும், சச்சின் டெண்டுல்கர் தானாகவே முன்வந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை அணுகி, பட்டோடி பெயர் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷாவும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

Pataudi Medal 1

இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறும்போது, “சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டு பட்டோடியின் பெயர் இந்தியா-இங்கிலாந்து போட்டியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஜெய் ஷாவும் இதுதொடர்பாக பேசினார். இதைத் தொடர்ந்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரை வெல்லும் அணியின் கேப்டனுக்கு பட்டோடியின் பெயர் பொறித்த பதக்கத்தை வழங்க முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளன.

தொடருக்கான பெயர் மாற்றம் குறித்த முறையான அறிவிப்பு நிகழ்ச்சி நடத்தப்படாத நிலையில் வரும் ஜூன் 20-ம் தேதி, லீட்ஸில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய தினமான 19-ம் தேதி பெயரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுலகர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக உள்ளார். அதேவேளையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மறுபுறம், பட்டோடி இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் நிலப்பரப்புடன் ஆழமான உறவுகளைக் கொண்டிருந்தனர். இப்திகார் அலி கான் பட்டோடி மற்றும் அவரது மகன் மன்சூர் இருவரும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளனர். மேலும் இருவரும் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top