சாம்பியன் டிராபியால் பாக்.கிரிக்கெட் வாரியத்தில் மெகா நிதிநெருக்கடி
இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் கடந்த 29 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு தற்போது தான் முதன்முறையாக சாம்பியன் டிராபி நடத்தப்பட்டது. இந்த முறை அத்தனை நாட்டு அணிகளையும் அசத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
இதற்காக ராவல்பிண்டி, லாகூர், கராச்சி ஆகிய மூன்று மைதானங்களை ரூ. 500 கோடி மதிப்பில் செலவிட்டது. மேலும் அத்தனை போட்டிகளையும் நடத்த ரூ. 347 கோடி செலவிட்டனர். ஐசிசி சாம்பியன் டிராபிக்காக பாகிஸ்தான் வாரியம் செலவழித்த மொத்த தொகை ரூ. 869 கோடி.

ஆனால் இந்தியா அங்கு விளையாட மறுத்ததாலும், பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தாலும் அத்தனை முதலீடும், பாக். வாரியத்திற்கு இழப்பாக மாறிவிட்டது. லாகூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே பாகிஸ்தான் அணி விளையாடியது.
அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இந்தியாவுடனான ஆட்டம் துபாயில் நடந்தது. வங்கதேசத்திற்கு எதிராக ராவல்பிண்டி ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் எந்தவித வருவாயும் இல்லாமல் படுத்தே விட்டது பாக். வாரியம்.
ஐசிசி சாம்பியன் டிராபி நடத்தியதில் பாக். வாரியத்திற்கு வரவு வெறும் ரூ.52 கோடி தான். செலவு ரூ.869 கோடி. செலவழித்த நிதியில் மொத்தம் 85 சதவீதம் இழப்பாக முடிந்துவிட்டது. அதாவது ரூ.737 கோடி காலி. இதனால் பெரும் நிதி நெருக்கடியில் தவிக்கிறது பாக்.கிரிக்கெட் வாரியம்.