மவுண்ட் மவுங்கனி
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தத பாகிஸ்தான் அணி தொடரை இழந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுறுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் போட்டியில் 4-வது போட்டி மவுண்ட் மவுங்கனி நகரில் இன்று (மார்ச் 23) நடைபெற்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ஃபின் ஆலன் 20 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவர்களல் 59 ரன்களை விளாசி மிரட்டியது.
மிடில் ஆர்டரில் மார்க் சாப்மேன் 16 பந்துகளில், 24 ரன்களும் டேரில் மிட்செல் 23 பந்துகளில், 29 ரன்களும் சேர்த்தனர். இறுதிக்கட்ட ஓவர்களில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 26 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினார்.
பாகிஸ்தான் அணி தரப்பில் பந்துவீச்சில் ஹாரிஸ் ரவூஃப் 3, அப்ரார் அகமது 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஷாகின் ஷா அப்ரிடி, ஷதப் கான் ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி தலா 49 ரன்களை தாரைவார்த்தனர். இவர்கள் இருவரும் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
221 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது ஹாரிஸ் 2, ஹசன் நவாஸ் 1, கேப்டன் ஆகா சல்மான் 1, இர்பான் கான் 24, ஷதப் கான் 1, குஷ்தில் ஷா 6, அப்பாஸ் அப்ரிடி 1, ஷாகீன் ஷா அப்ரிடி 1, ஹாரிஸ் ரவூஃப் 6 ரன்களில் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய அப்துல் சமத் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்ததால் பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடக்க முடிந்திருந்தது.
நியூஸிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃபி 4, சகரி கிளென் ஃபோல்க்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-1 என கைப்பற்றியது.

முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் நியூஸிலாந்து வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டத்தில் 204 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தற்போது படுதோல்வியை சந்தித்து தொடரை பறிகொடுத்துள்ளது.