மும்பை
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. இதையொட்டி மும்பையில் நேற்று கேப்டன் ஷுப்மன் கில்லும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஷுப்மன் கில் கூறியதாவது:
நான் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பேட்டிங் வரிசையை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எங்கள் திட்டங்களை வகுக்க 10 நாட்கள் உள்ளன.
இங்கிலாந்தில் 10 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறோம். இதனுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்துக்கு பின்னரே டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் வரிசையை முடிவு செய்வோம்.
ஒரு தலைவராக நான், முன்மாதிரியாக செயல்பட்டு அணியை வழிநடத்த விரும்புகிறேன், நான் விளையாடும் எந்தப் போட்டியிலும் ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். சராசரி மற்றும் ரன்கள் எணிக்கையை நான் பார்ப்பது கிடையாது. ஆனால் எனது செயல்திறனால் அணியை வழிநடத்த விரும்புகிறேன்.
கேப்டன்ஷிப்பில் எனக்கென குறிப்பிட்ட பாணி எதுவும் இல்லை. நேரம் மற்றும் அனுபவத்துடன், எனது தனிப்பட்ட பாணி செழிக்கும். வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். வீரர்கள் அணியில் தங்கள் இடம் குறித்து பாதுகாப்பாக உணருவதை உறுதி செய்வது கேப்டன் பணிகளில் முக்கியமான ஒன்று.
ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் தொடரை வெல்ல அழுத்தம் இருக்கும். இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்ற இரண்டு வீரர்களின் (ரோஹித் சர்மா, விராட் கோலி) இடத்தை நிரப்புவது நிச்சயமாக கடினமாக இருக்கும். இது வேறுபட்டதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்களிடம் அனுபவமும் திறமையும் சிறந்த கலவையில் உள்ளது.
இங்கிலாந்து அணி ஒரு குறிப்பிட்ட வழியில் (பாஸ்பால்) விளையாடுகிறார்கள். இந்தியாவில் நாங்கள் அதைக் கண்டோம். நாங்கள் எங்கள் செயல்திறனில் முன்முயற்சியுடன் இருந்தால் அது எங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும்.
இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.