கோவை
டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூன் 7) கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோலாஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. வாசிம் அஹ்மத் (41 ரன்கள், 32 பந்துகள்), ஜாபர் ஜமால் (39 ரன்கள், 33 பந்துகள்) மற்றும் ஆர். ராஜ்குமார் (30* ரன்கள், 16 பந்துகள்) ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.
நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சில், ஆர். சோனு யாதவ் 3 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டினார். என்.எஸ். ஹரிஷ் 3 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பி. செரியன் 3 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 162 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.
சந்தோஷ் குமார் துரைசாமி 35 பந்துகளில் 45 ரன்களும், அருண் கார்த்திக் 21 பந்துகளில் 41 ரன்களும் குவித்து வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர். பின்னர், என்.எஸ். ஹரிஷ் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
திருச்சி கிராண்ட் சோலாஸ் பந்துவீச்சில், யு. முகிலேஷ் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், எம். கணேஷ் மூர்த்தி 2 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், சஞ்சய் யாதவ் 3.2 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
என்.எஸ். ஹரிஷ், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும், பேட்டிங்கில் முக்கியமான 35* ரன்களையும் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்ததால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.