8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தியது
டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூன் 15) இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஹரி நிஷாந்த் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். முகமது 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் பூபதி குமார் 12, கேப்டன் அபிஷேக் 12 ரன்களும் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியதில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி தரப்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான சச்சின் ராதி முக்கிய பங்கு வகித்தார். அவர், 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடினார். சோனு யாதவ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். ராக்கி பாஸ்கர், நிர்மல் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

127 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சந்தோஷ் குமார் 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசி மிரட்டினார்.
குருசாமி அஜிதேஷ் 3, நிர்மல் குமார் 37, ரித்திக் ஈஸ்வரன் 13 ரன்கள் சேர்த்தனர். ஆட்ட நாயகனாக சச்சின் ராதி தேர்வானார். நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்தது.
3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.