சோர்சோவ்
போலந்து நாட்டில் வரும் 23-ம் தேதி நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார்.
எட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா வரும் 24-ம் தேதி பெங்களூருவில் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்தத் தொடரில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்வதை உறுதியும் செய்திருந்தனர்.
ஆனால் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 23-ம் தேதி போலந்து நாட்டின் சோர்சோவ் நகரில் நடைபெற உள்ள 71-வது ஆர்லன் ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் நீரஜ் சோப்ரா.
இந்த தொடரில் 2 முறை உலக சாம்பியனும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், போலந்தின் மார்சின் க்ருகோவ்ஸ்கி, சைப்ரியன் மிர்ஸிக்லோட், டேவிட் வெக்னர் ஆகியோர் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவால்கள் அளிக்கக்கூடும்.