ஹைதராபாத்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நடுவரிசை பேட்டிங்கில் அதிரடி வீரராக திகழும் திலக் வர்மா, ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பேசும்போது, “ ஐபிஎல் தொடரில் 2022-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தேன். ஆனால், அதற்கு பிறகு மும்பை அணி கோப்பையை வெல்லவில்லை.
என்னுடைய கடைசி மூன்று சீசன்கள் நன்றாக இருந்தன. ஆனாலும் அணிக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நாங்கள் முழு மனதோடு போராட தயாராக இருக்கிறோம். ஹார்திக் பாண்டியா எப்போதும் வீரர்களை ஊக்கப்படுத்துவார்.
ஏதேனும் தவறு நடந்தால் நேரடியாகவும் தெளிவாகவும் பேசுவார். நாங்கள் இருவரும் நல்ல புரிதலுடன் இருக்கிறோம். ஐபிஎல் தொடரால் பல மூத்த வீரர்களுடனும், உள்நாட்டு வீரர்களுடனும் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தத் தொடரில் சர்வதேச அரங்கில் விளையாடும் பல வீரர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது” என்றார்.