எம்ஐ கோச் ஜெயவர்தனே அடவாடி
லக்னோ
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி (எம்ஐ). 204 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. கடைசி 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில் திலக் வர்மா ரன்கள் சேர்க்க தடுமாறிக் கொண்டிருந்தார். ஷர்துல் தாக்குர் வீசிய 19-வது ஓவரின் 5-வது பந்தில் திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார்.
திலக் வர்மா 23 பந்துகளில், 25 ரன்கள் எடுத்திருந்தார். அணி நிர்வாகம் அவரை களத்தில் இருந்து வெளியே எடுத்ததால் மிகுந்த வருத்தத்துடன் நடையை கட்டினார். அந்த சூழ்நிலையில் மும்பை அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவையாக இருந்தது. இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும், டி.வி. வர்னணையாளர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல முறை அதிரடியாக விளையாடி வெற்றி திலக் வர்மா வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். இதே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர், தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு பலமுறை மேட்ச் வின்னராக திகழ்ந்துள்ளார். இதன் வாயிலாகத்தான் அவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்திருந்தது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது அவரை ரிட்டயர்டு அவுட் செய்திருப்பது அவரது நம்பிக்கையை சிதைப்பதாக அமைந்துள்ளது.
போட்டி முடிவடைந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறும்போது, “ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் திலக் வர்மா சிறப்பாக பேட் செய்தார். 3-வது விக்கெட்டை நாங்கள் இழந்ததும் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் அடித்து விளையாட விரும்பினார். இருப்பினும் முடியவில்லை.
இறுதி வரை இருந்து ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினார். எங்களுக்கு கடைசி சில பந்துகளில் எனர்ஜிட்டிக்காக காணப்படும் வீரர்கள் களத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. அதனால் திலக் வர்மாவை வெளியே எடுக்கும் உத்தியை கையாண்டோம். இது கிரிக்கெட்டில் நடக்கும். இருப்பினும் அவரை வெளியேற்றியது சிறப்பானது அல்ல. ஆட்டத்தின் சூழலை கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது” என்றார்.