மும்பை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் (1.274) அனைத்து அணிகளைவிட அதிகமாக உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் நேரடியாக தகுதி பெற வேண்டுமானால் எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெறவேண்டும் என சூழ்நிலையில் மும்பை அணி உள்ளது.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் (0.867) ஆக இருக்கிறது. குஜராத் அணிக்கு இன்றைய ஆட்டம் உட்பட 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் இரண்டில் வெற்றி பெற்றாலேயே பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துவிடலாம். இந்த 4 ஆட்டங்களில் இரண்டை குஜராத் அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.
504 ரன்கள் குவித்துள்ள சாய் சுதர்சன், 470 ரன்கள் சேர்த்துள்ள ஜாஸ் பட்லர், 465 ரன்கள் எடுத்துள்ள ஷுப்மன் கில் ஆகியோர் டாப் ஆர்டரில் வலுவாக உள்ளனர். நடப்பு சீசனில் அந்த அணி குவித்த வெற்றிகளில் இவர்கள் 3 பேரும் பிரதான பங்களிப்பை வழங்கி உள்ளனர். எனினும் மும்பை அணியிடம் சிறந்த பந்துவீச்சு தாக்குதல் இருப்பதால் குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவான சவால்களை சந்திக்கக்கூடும்.
ஏனெனில் மும்பை அணியில் டிரெண்ட் போல்ட் (16 விக்கெட்கள்), ஹர்திக் பாண்டியா (13 விக்கெட்கள்), ஜஸ்பிரீத் பும்ரா (11 விக்கெட்கள்), தீபக் சாஹர் (9 விக்கெட்கள்) ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர் ஆகியோர் பவர்பிளேவிலும், பும்ரா நடு ஓவர் மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களிலும் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சில் கரண் சர்மா, மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் அசத்தி வருகின்றனர்.
மும்பை அணியில் பேட்டிங்கில் ரோஹித் சர்மா சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் ஒட்டுமொத்த பலத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. 293 ரன்கள் குவித்துள்ள அவர், கடைசியாக விளையாடி 4 ஆட்டங்களில் 3-ல் அரை சதம் அடித்துள்ளார். இதில் 2 ஆட்டங்களில் 70 ரன்களுக்கு மேல் விளாசியிருந்தார்.
334 ரன்கள் குவித்துள்ள மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டனும் சீரராக விளையாடி வருகிறார். இந்த ஜோடியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். நடுவரிசையில் 475 ரன்கள் குவித்துள்ள சூர்யகுமார் யாதவ், 239 ரன்கள் சேர்த்துள்ள திலக் வர்மா ஆகியோர் தங்களது தாக்குதல் ஆட்டத்தால் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். பின்வரிசையில் ஹர்திக் பாண்டியா, நமன்திர், கார்பின் போஷ் ஆகியோரும் மட்டையை சுழற்றக்கூடியவர்கள்.
குஜராத் அணியின் பந்துவீச்சில் 19 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கும் பிரசித் கிருஷ்ணா, 14 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள முகமது சிராஜ், 12 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள சாய் கிஷோர் ஆகியோர் மும்பை அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
நடப்பு சீசனில் மும்பை – குஜராத் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த மார்ச் 29-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியிருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.