ரூ.6 கோடி பரிசுத்தொகையை அள்ளியது
கொல்கத்தா
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 11-வது சீசனின் இறுதிப் போட்டியில் நேற்று (ஏப்பரல் 12) மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் – பெங்களூரு எப்.சி. அணிகள் கொல்கத்தாவில் மோதின. 49-வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் அல்பர்ட்டோ ரோட்ரிக்ஸ் சுயகோல் அடித்தார். இதனால் பெங்களூ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 72-வது நிமிடத்தில் மோகன் பகான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஜேசன் கம்மின்ஸ் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 6-வது நிமிடத்தில் மோகன் பகான் ஜேமி மெக்லாரன் கோல் அடித்து அசத்தினார். இதுவே மோகன் பகான் அணியின் வெற்றி கோலாகவும் அமைந்தது.
முடிவில் மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.