ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு இன்று (ஏப்ரல் 23ம் தேதி) நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியின் போது பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துளளது.
மேலும், ஆட்டத்தின் போது வீரர்கள், நடுவர்கள் உள்ளிட்டோர் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போட்டியின் முடிவில் பயன்படுத்தப்படும் பட்டாசு வெடிக்கும் கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மற்றும் வீரர்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் சியர் லீடர்ஸ் கொண்டாட்டங்களுக்கும் இந்தப் போட்டியில் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.