Diya Chitale

WTT ஸ்டார் கன்டென்டரில் மனுஷ் ஷா, தியா சித்தலேவுக்கு வைல்டு கார்டு

இந்தியாவில் இருந்து 19 பேர் பங்கேற்பு

WTT ஸ்டார் கன்டென்டர் 2025 தொடரில் தேசிய சாம்பியன்களான மனுஷ் ஷா, தியா சித்லே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியாவில் இருந்து 19 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். ஒட்டுமொத்தமாக 27 இந்திய போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். WTT ஸ்டார் கன்டென்டர் தொடரில் இந்தியாவில் இருந்து அதிகம் பேர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.

WTT ஸ்டார் கன்டென்டர் 2025 தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரை ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. போட்டியை நடத்தும் நாட்டுக்கான வைல்டு கார்டு பிரிவில் இருந்து 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, கிரித்விகா சின்ஹா, சுவஷ்திகா கோஷ், தேசிய சாம்பியனான தியா சித்தலே ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சினேஹித் சுரவஜ்ஜுலா, தேசிய சாம்பியனான மனுஷ் ஷா ஆகியோருக்கு வைல்டு கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களில் 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் பூங்கா கேங்க்யான், மால்டா வீரர் கிம் டேஹ்யுன் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தவும், வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் வைல்டு கார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. WTT பரிந்துரையின் பேரில் வளர்ந்து வரும் வீராங்கனைகளான இந்தியாவின் சுஹானா சைனி மற்றும் தனிஷா கோடெச்சா ஆகியோருக்கு வைல்டு கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. WTT இளைஞர் பிரிவு பரிந்துரையில் அங்கூர் பட்டாச்சார்ஜி (இந்தியா) மற்றும் யூ யெரின் (தென் கொரியா) ஆகியோருக்கு வைல்டுகார்டு கிடைத்துள்ளது.

manush shah
மனுஷ் ஷா

வைல்டு கார்டு குறித்து ஸ்டூவா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் துணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான தீபக் மாலிக் கூறும்போது, “வைல்டு கார்டு வழங்குவது என்பது WTT நிகழ்வுகளின் ஒரு முக்கிய பகுதியாகும். தரவரிசை அல்லது தகுதிக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் திறமையான வீரர்கள் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிட வைல்டு கார்டு அனுமதிக்கிறது.

தனிஷா மற்றும் சுஹானா போன்ற நம்பிக்கைக்குரிய இளம் வீரர்கள் இந்த வாய்ப்பைப் பெறுவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை அவர்கள், சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களின் பங்கேற்பு இந்திய பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தொடருக்கு ஒட்டுமொத்த போட்டித்தன்மையையும் சேர்க்கிறது” என்றார்.

இரட்டையர் வைல்டு கார்டுகள் முழுக்க முழுக்க இந்திய ஜோடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருடன் ஓய்வு பெற உள்ள சரத்கமல், ஆடவர் இரட்டையர் பிரிவில் சினேஹித் சுரவஜ்ஜுலாவுடன் இணைந்து விளையாட உள்ளார். இந்த ஜோடிக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆடவர் பிரிவில் 2-வது ஜோடியாக சத்தியன் ஞானசேகரன், ஹர்மீத் தேசாய் ஜோடியும் வைல்டு கார்டை தட்டிச் சென்றுள்ளது.

கலப்பு இரட்டையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன், ஸ்ரீஜா அகுலா ஜோடியும் மணிகா பத்ரா, மானவ் தாக்கர் ஜோடியும் வைல்டு கார்டை பெற்றுள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா, சுவாஸ்திகா கோஷ் ஜோடியும், சிண்ட்ரெலா தாஸ்- சுஹானா ஜோடியும் வைல்டு கார்டை கைப்பற்றியுள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் WTT பரிந்துரையின் பேரில் தென் கொரியாவின் பார்க் கியுஹியோன், ஆஸ்திரியாவின் ராபர்ட் கார்டோஸ் ஆகியோருக்கும் வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top