மும்பை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 27) நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசினர்.
ரோஹித் சர்மா 12, வில் ஜேக்ஸ் 29, திலக் வர்மா 6, கேப்டன் ஹர்திக் பாண்டியா 5, நமன் திர் 25 ரன்கள் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மயங்க் யாதவ் 2 விக்கெட்களையும், அவேஷ் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
216 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35, மிட்செல் மார்ஷ் 34, நிகோலஸ் பூரண் 27, டேவிட் மில்லர் 24, ரவி பிஷ்னோய் 13 ரன்கள் சேர்த்தனர். எய்டன் மார்க் ரம் 9, கேப்டன் ரிஷப் பந்த் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். வில் ஜேக்ஸ் 2, கார்பின் போஷ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
மும்பை அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
ஒரு அணியாக நாங்கள் முதலில் பந்து வீசுவது என எடுத்த முடிவு சரியானது என்றே நாங்கள் உணர்கிறோம், ஏனென்றால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் எங்கள் பேட்டிங்கை நம்பி உள்ளோம்.
பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் அவர்களுக்கு சிறந்த நிலைமைகளை வழங்க விரும்புகிறோம், ஆனால் இன்று எங்கள் நாள் அல்ல. எதிரணியும் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறது, உங்களை நீங்களே கேள்வி கேட்காமல் அவர்களை பாராட்ட வேண்டும்.
ஒரு அணியாக எங்களுக்கு சரிவு உள்ளது, ஆனால் சரியான நேரத்தில் எங்களுக்கு ஒரு இடைவெளி இருப்பதால் வெற்றி பெறுவதற்கான வழியை நாங்கள் கண்டுபிடிக்க முடியும். எனது பார்ம் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. விஷயங்களை எளிதாக வைத்திருக்க வேண்டும்.
இது போன்ற ஒரு சீசனில் விஷயங்கள் உங்கள் வழியில் செல்லாத போது, ஒரு வீரராக உங்களை நீங்களே கேள்வி கேட்கத் தொடங்குவீர்கள். அது நீங்கள் செய்ய விரும்பும் ஒன்றல்ல.
அணி சிறப்பாக செயல்படும்போது, நீங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இது ஒரு குழு விளையாட்டு. ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட வீரரை பற்றி பேசுவது சரியான விஷயம் அல்ல என்று நான் நினைக்கிறேன்.
மயங்க் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் போட்டியிலேயே அவர், சிறந்த ரிதத்தை பெற்றார். அடுத்த முறை அவர் மேலும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ரிஷப் பந்த் கூறினார்.