ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 55 பந்துகளில் , 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் விளாசினார்.
199 ரன்கள் இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் அஜிங்க்ய ரஹானே 36 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியதாவது:
இந்த ஆடுகளத்தில் 199 ரன்கள் சேஸிங் செய்யக்கூடியது என்றே நினைத்தேன். பந்துவீச்சின் போது நாங்கள் ஆட்டத்துக்குள் மீண்டு வந்தோம். அதே வேளையில் 199 ரன்களை துரத்தும்போது, பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தொடர் முழுவதும் நாங்கள் போராடி வருகிறோம். நாங்கள் நன்றாக பந்து வீசினோம், ஆனால் பேட்டிங்கில் தடுமாறினோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும்.
இது கொஞ்சம் மெதுவாக இருந்தது. நாங்கள் அவர்களை 200 ரன்னுக்கு கீழே கட்டுப்படுத்தினால் , அது மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆடுகளத்தினன் சூழ்நிலைகளை நாங்கள் நன்கு அறிவோம் நாங்கள் சரியாக பேட்டிங் செய்ய வேண்டும், அதிலும் மிடில் ஓவர்களில் நன்றாக பேட் செய்ய வேண்டும், அங்குதான் நாங்கள் தடுமாறுகிறோம்.
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம், எங்கள் பந்துவீச்சாளர்களிடம் எந்த புகாரும் இல்லை. பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். பீல்டிங் என்பது ஒரு அணியாக எங்களால் கட்டுப்படுத்த முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.
களத்தில் 10-15 ரன்களை சேமிக்க முடிந்தால். அது அணிக்கு எப்போதும் நல்லது. இது எப்போதும் நோக்கம் மற்றும் அணுகுமுறையைப் பற்றியது, நீங்கள் 20 ஓவர்கள் முழுவதும் மாற வேண்டும், அங்குதான் நாங்கள் தேக்கம் அடைகிறோம்.
ஆனால் அணியில் உள்ள வீரர்கள் கடினமாக உழைக்கிறார்கள். டி20 கிரிக்கெட் எப்போதுமே துணிச்சலுடன் விளையாடக்கூடிய வடிவமாக இருக்கிறது. கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்க முடியாது. உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
சிறப்பாக விளையாடும் போதே முன்னேற்றத்தைத் தேடவேண்டும். நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், ஒரு அணியாக நாங்கள் 1% சிறப்பாக இருந்தாலும், அது மிகவும் முக்கியமானது.
ஒரு பேட்டிங் யூனிட்டாக தைரியமாக இருக்க வேண்டும், வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு நேர்மறையான மனநிலையுடன் விளையாட வேண்டும். நீங்கள் அவுட் ஆவதை நினைத்து விளையாடினால் அவுட் ஆகுவீர்கள்.
ரன்கள் எடுப்பதைப் பற்றி யோசித்தால், ரன்கள் எடுக்க முடியும்.
எங்கள் பேட்ஸ்மேன்கள் இதைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். மிடில் ஆர்டரில் தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர், நான் அவர்களை முழுமையாக ஆதரிக்கிறேன். அங்க்ரிஷ் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இவ்வாறு அஜிங்க்ய ரஹானே கூறினார்.