சென்னை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்பரல்) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி அணி கே.எல்.ராகுலின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது.
கே.எல்.ராகுல் 51 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அபிஷேக் போரெல் 20 பந்துகளில் 33 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 பந்துகளில் 24 ரன்களும் விளாசினர். 184 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் தேர்வானார்.

கே.எல்.ராகுல் கூறும்போது, “ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக தொடக்க வீரராக விளையாடவே தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால் பயிற்சியாளரிடம் நான் பேசியபோது அவர், என்னை 4-வது இடத்தில் களமிறக்க விரும்புவதாக கூறினார். ஏனெனில் அந்த இடத்துக்கு விளையாடிய வேண்டிய வீரர் வரவில்லை. இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டரில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.