இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ள நிலையில், 33 வயதாகும் கருண் நாயரும் இடம்பெற்றுள்ளது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு (36 வயது) அடுத்தபடியாக அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர்களில் ஒருவராக கருண் நாயர் உள்ளார்.
கருண் நாயர் இந்திய அணிக்காக கடந்த 2017-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடியிருந்தார். அதன் பிறகு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.
2024-25 சீசன் உள்ளூர் போட்டிகளில் 9 போட்டிகளில் விளையாடிய கருண் நாயர் 863 ரன்கள் குவித்தார். அதில் 4 சதங்கள் அடங்கும். அவரது சராசரி 54 ஆக இருந்தது. விஜய் ஹசாரே கோப்பையில் 7 போட்டிகளில் 779 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதில் 5 சதங்கள் அடங்கும்.

