அகமதாபாத்
அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 3) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து முதல் முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை பஞ்சாப் கிங்ஸ் அணி இழந்தது. 191 ரன்கள் இலக்கை துரத்திய இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இறுதிப் போட்டிக்கு பின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த தோல்வி வருத்தமாக இருக்கிறது. ஆனால், எங்கள் வீரர்கள் எப்படி வாய்ப்பை எடுத்து கொண்டார்கள் என்பது சிறப்பாக இருக்கிறது.
மேலும், எங்கள் அணியில் ஆதரவு ஊழியர்கள் முதல் உரிமையாளர்கள் வரை அனைவரும் சிறப்பானவர்கள். போட்டியை காண வந்து பங்களித்த ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
கடந்த போட்டியை வைத்து பார்க்கும் பொழுது இங்கு 200 ரன்கள் சரியானதுதான் என நினைத்தேன். ஆர்சிபி அணி வீரர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள். குறிப்பாக கிருணல் பாண்டியா சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது, அதை அவர் சரியாக பயன்படுத்தினார். கிருணல் பாண்டியா ஜோஷ் இங்லிஷ் விக்கெட்டை வீழ்த்தியதுதான் திருப்புமுனையாக அமைந்தது.
எங்கள் இளம் வீரர்கள் ஒவ்வொருவர் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் அனைவரும் அச்சமற்ற முறையில் விளையாடினார்கள். நாங்கள் அடுத்த ஆண்டு திரும்பி வந்து சிறப்பாக விளையாடி இந்த கோப்பையை வெல்வோம். எங்களால் மீண்டும் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும்” என்றார்.

