IPL trophy

ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்குகிறது?

மும்பை

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது.

10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் பஞ்சாப், டெல்லி கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் போட்டி ஒளிபரப்பு குழுவினர் உட்பட சுமார் 300 பேர் சிறப்பு வந்தே பாரத் மூலம் தரம்சாலாவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. போட்டி நடைபெறும் இடங்கள், போட்டி அட்டவணை குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் இடம் பெற்றிருந்த வெளிநாட்டு வீரர்களை பாதுகாப்பாக அவர்களது தாயகத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்திய வீரர்கள் தங்களது நகரங்களுக்கு சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களை கருதி ஐபிஎல் தொடரின் எஞ்சிய 16 ஆட்டங்களை பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கையை பிசிசிஐ முன்னெடுத்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு எல்லை பகுதியிலும் அமைதி திரும்பி வருகிறது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து பிசிசிஐ விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் அட்டவணையின் படி மே 25-ம் தேதிக்குள் தொடரை நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் அதன் பின்னர் இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச போட்டிகள் வரிசையாக அணிவகுக்கக்கூடும். மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது தேசிய அணிக்கான தொடர்களில் விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகக்கூடும்.

இதனால் ஏற்கெனவே திட்டமிட்ட காலத்துக்குள் ஐபிஎல் தொடரை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கையை பிசிசிஐ எடுக்கக்கூடும். இந்த வகையில் அடுத்த 5 முதல் 6 நாட்களுக்குள் (வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை) போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top